செய்திகள்
கொரோனா வைரஸ்

உலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக உயர்வு

Published On 2020-05-27 10:54 GMT   |   Update On 2020-05-27 10:54 GMT
உலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 56 லட்சமாக உயர்ந்தது.
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ், கடந்த டிசம்பர் 1-ந் தேதி சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக வெளிப்பட்டது. தற்போது ஏறத்தாழ 200 நாடுகளில் பரவி உள்ளது. இந்த 5 மாதங்களில் உலகமெங்கும் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 56 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மதியம் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா தரவு மையம் வெளியிட்ட தரவுகள், உலகில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 56 லட்சத்து 18 ஆயிரத்து 785 என தெரிவித்தது.



கொரோனா தாக்குதலில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்கிறது. அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 9 ஆயிரத்து 132 ஆனது.

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நாடு பிரேசில். அங்கு இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 76 ஆயிரத்து 669 ஆகும். மூன்றாம் இடத்தில் ரஷியா இருக்கிறது. அங்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 342 ஆகும்.

இங்கிலாந்தில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 227 பேரும், இத்தாலியில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 158 பேரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்று 3 லட்சத்து 48 ஆயிரத்து 612 710 ஆனது. இந்த உயிர்ப்பலியிலும் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. அங்கு 99 ஆயிரத்து 878 பேர் பலியாகி உள்ளனர்.

அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் 37 ஆயிரத்து 48 பேரும், இத்தாலியில் 32 ஆயிரத்து 877 பேரும், பிரான்சில் 28 ஆயிரத்து 432 பேரும், பிரேசிலில் 23 ஆயிரத்து 522 பேரும் உயிரிழந்துள்ளனர்.



அதே நேரத்தில் உலக சுகாதார நிறுவனம், நேற்று முன்தினம் நிலவரப்படி உலகமெங்கும் 53 லட்சத்து 7 ஆயிரத்து 298 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவாகி இருப்பதாக தெரிவித்தது. புதிதாக ஒரே நாளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 790 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளதாக அது கூறியது.

பலியானவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 42 ஆயிரத்து 70 எனவும் அந்த அமைப்பு தெரிவித்தது.

உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றை மார்ச் 11-ந் தேதிதான் உலகளாவிய தொற்று நோயாக பிரகடனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News