செய்திகள்
வெளியுறவு மந்திரி பிரதீப் கியாவாலி

இந்தியாவின் தாராள உதவிக்கு நன்றி தெரிவித்த நேபாளம்

Published On 2020-05-18 07:01 GMT   |   Update On 2020-05-18 07:01 GMT
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதற்கு இந்தியா மருந்து பொருட்கள் அளித்து உதவியதற்கு நேபாளம் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது.
காட்மாண்டு:

உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிற கொரோனா வைரஸ், மலைப்பகுதிகளை முக்கியமாக கொண்டுள்ள நேபாள நாட்டையும் கூட விட்டு வைக்கவில்லை.

அங்கு நேற்று முன்தின நிலவரப்படி 281 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறது. 36 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்துள்ளனர். ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

244 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 26 ஆயிரத்து 700 பேருக்கு அங்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.



கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தெற்காசிய நாடுகளுடன் இந்தியா கரம் கோர்த்து செயல்பட்டு வருகிறது. உதவிகளையும் தாராளமாக வழங்கி வருகிறது.

அந்த வகையில் நேபாளத்துக்கு இந்தியா, 30 ஆயிரம் கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளையும், 23 டன் மருந்து பொருட்களையும் நன்கொடையாக வழங்கி உள்ளது.

இவற்றை நேபாளத்துக்கான இந்திய தூதர் வினய் மோகன் சவாத்ரா, நேபாள சுகாதார மந்திரி பானுபக்த தக்காலிடம் நேரில் வழங்கினார்.

இந்தியாவின் இந்த தாராள உதவிக்கு நேபாளம் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது. இதையொட்டி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி பிரதீப் கியாவாலி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மருந்து பொருட்களையும், 30 ஆயிரம் பரிசோதனை கருவிகளையும் வழங்கிய இந்திய அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி” என கூறி உள்ளார்.
Tags:    

Similar News