செய்திகள்
தாக்குதலில் காயமடைந்த நபர்

போலீஸ் அதிகாரியின் இறுதிச்சடங்கில் வெடிகுண்டு தாக்குதல் - 40 பேர் பலி

Published On 2020-05-12 10:40 GMT   |   Update On 2020-05-12 11:47 GMT
ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டு படையினருக்கு உதவியாக அமெரிக்கா தலைமையினான கூட்டுப்படைகளும் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இதனால், அரசுப்படையினருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதற்கிடையில், அந்நாட்டின் நஹாங்கர் மாகாணம் ஹுவா மாவட்டத்தின் மூத்த போலீஸ் அதிகாரி ஹஜீ ஷேக் இகராம் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 50-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பே காரணமாக இருக்கக்கூடும் ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News