செய்திகள்
சொந்த நாட்டு போர் கப்பல் மீதே ஏவுகணை தாக்குதல் - 19 வீரர்கள் பலி
ஈரான் போர் கப்பல் தனது சொந்த நாட்டை சேர்ந்த மற்றொரு போர் கப்பல் மீது தவறுதலாக நடத்திய ஏவுகணை தாக்குதலில் கடற்படையை சேர்ந்த 19 வீரர்கள் உயிரிழந்தனர்.
தெஹ்ரன்:
ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்கள் இன்று ஓமன் வளைகுடாவின் கடற்பரப்பில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இந்த பயிற்சியில் ஏவுகணை தாங்கிய போர் கப்பல்களும் ஈடுபட்டன.
போர் கப்பல்கள் கடல் பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இலக்குகளை தாக்கி அழிக்கும் பயிற்சிகள் ஈடுபட்டன.
ஜாக் துறைமுகப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த பயிற்சியின் போது ஈரான் நாட்டின் ஏவுகணை தாங்கிய போர் கப்பல் ஒன்றில் இருந்து கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இலக்கை தாக்கி அழிக்கும் நோக்கில் ஏவுகணை ஒன்றை ஏவியது.
அந்த ஏவுகணை இலக்கை அழிக்காமல் தவறுதலாக இலக்கிற்கு அருகே பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மற்றுமொரு போர் கப்பலை தாக்கியது.
இந்த ஏவுகணை தாக்குதலில் போர் கப்பலில் பயிற்சி செய்துகொண்டிருந்த கடற்படையை சேர்ந்த 19 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. சொந்த நாட்டு போர் கப்பல் மீதே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.