செய்திகள்
நிலநடுக்கம்

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 2 பேர் பலி

Published On 2020-05-09 06:36 GMT   |   Update On 2020-05-09 06:36 GMT
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 60 வயது முதியவர் உள்பட 2 பேர் பலியாகினர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
டெஹ்ரான்:

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 69 கி.மீ. தொலைவில் உள்ள தமாவாண்ட் நகரில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஈரான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் டெஹ்ரானிலும் உணரப்பட்டது. இதில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் வீடுகளுக்குள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

தமாவாண்ட் நகரில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 60 வயது முதியவர் உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே ஜப்பானிலும் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள இசு தீவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. 
Tags:    

Similar News