செய்திகள்
ரஷிய அதிபர் புதின்

இதற்கு காரணம் அவர்கள் தான் - கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷியா மீது குற்றம் சுமத்திய செனட் உறுப்பினர்

Published On 2020-04-20 23:23 GMT   |   Update On 2020-04-20 23:23 GMT
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ரஷியாவும், சவுதி அரேபியாவும் தான் காரணம் என அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர் ஜேம்ஸ் இன்ஹோபி குற்றச்சாட்டியுள்ளார்.
வாஷிங்டன்:

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் தேவை பல மடங்கு குறைந்துள்ளது. தேவை குறைவாக இருந்தபோதும் கடந்த மாதம் ரஷியாவும், சவுதி அரேபியாவும் போட்டி போட்டுக்கொண்டு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்தது. இதனால், கச்சா எண்ணெயின் விலை பல மடங்கு குறைந்தது.

ரஷியா, சவுதி இடையேயான போட்டியால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டும் என உணர்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாட்டு தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

மேலும், பிரச்சனைக்கு தீர்வுகானவும் உற்பத்தியை குறைப்பது தொடர்பாகவும் சவுதி அரேபியா தலைமையிலான கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 

பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதையடுத்து வரும் ஜூலை மாதம் வரை நாள் ஒன்றுக்கு, 90 லட்சத்து 70 ஆயிரம் பீப் பாய் (ஒரு பீப்பாய் 158.9 லிட்டர்) அளவிற்கு உற்பத்தியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பிரச்சனைகளால் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. 



இதற்கிடையில், அமெரிக்க பங்குச்சந்தை இன்று துவங்கியது முதல் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. அடுத்த மாதம் (மே) வழங்குவதற்கான கச்சா எண்ணெயின் ஒரு பேரல் விலை -37 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

வரலாற்றில் முதல் முறையாக ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை -37 டாலர்கள் என்ற விலைக்கு நிர்ணயம் இதுவே முதல் முறையாகும். 

தேவைக்கு அதிக உற்பத்தி, உற்பத்தி செய்த எண்ணெய்யை வாங்க யாரும் முன்வரதது, எண்ணெய்யை சேமித்து வைக்க உற்பத்தியாளர்களிடம் போதிய இடவசதி இன்மை போன்ற காரணத்தால் அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இந்த விலை வீழ்ச்சி உலக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துயுள்ளது.



இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு வீழ்ச்சி அடைவதற்கு ரஷியாவும், சவுதி அரேபியாவும் தான் காரணம் என அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர் ஜேம்ஸ் இன்ஹோபி குற்றச்சாட்டியுள்ளார்.

ரஷியாவும், சவுதி அரேபியாவும் போட்டி போட்டுக்கொண்டு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ததன் விளைவாகவே உலக சந்தையில் விலை மிகப்பெரிய அளவில் குறைந்து அமெரிக்கா பெரும் பாதிப்பை சந்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், கச்சா எண்ணெய் விவகாரத்தில் இத்தகைய பிரச்சனை ஏற்பட காரணமான ரஷியா மற்றும் சவுதி அரேபியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனடியாக கடுமையான பொருளாதாரத்தடைகளை விதிக்கவேண்டும் என செனட் உறுப்பினர் ஜேம்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
Tags:    

Similar News