செய்திகள்
ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் ராணுவ முன்னாள் தளபதிக்கு மரண வாரண்டு - வங்காளதேச கோர்ட்டு அதிரடி
ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் ராணுவ முன்னாள் தளபதி அப்துல் மஜித்தை தூக்கிலிடுவதற்கான மரண வாரண்டை வங்காளதேச மாவட்ட கோர்ட்டு நேற்று பிறப்பித்தது.
டாக்கா:
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் தந்தையும், அந்த நாட்டின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போது ராணுவ தளபதியாக இருந்த அப்துல் மஜித் என்பவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், அவர் உள்பட தேசிய தலைவர்கள் 5 பேரை படுகொலை செய்தார்.
இது தொடர்பான வழக்கில் அப்துல் மஜித்துக்கு கடந்த 1998-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பு வெளியானதும் அப்துல் மஜித் வங்காளதேசத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவானார். அவர் இந்தியாவில் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அப்துல் மஜித் வங்காளதேசம் திரும்பினார். தலைநகர் டாக்காவில் அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவரை உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அப்துல் மஜித்தை தூக்கிலிடுவதற்கான மரண வாரண்டை வங்காளதேச மாவட்ட கோர்ட்டு நேற்று பிறப்பித்தது. கொரோனா வைரஸ் காரணமாக கோர்ட்டு நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு அனுமதியோடு வங்காளதேச மாவட்ட கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.