செய்திகள்
சோமாலியா - ராணுவம் நடத்திய தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 10 பேர் பலி
சோமாலியா நாட்டில் ராணுவம் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 10 அல் ஷபாப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மொகடிஷு:
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டின், பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்த பயங்கரவாதக் குழுவினர் பொதுமக்கள், பாதுகாப்புப்படையினரை குறிவைத்து அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இவர்களை ஒழிக்கும் பணியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க அதிரடிப்படையினர் உதவிகளை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், சோமாலியாவின் ஜூபாலண்ட் மாகாணம் லோவர் ஜூபா என்ற பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து ராணுவத்தினர் நேற்று அதரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த தேடுதல் வேட்டையில் 10 அல் ஷபாப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பல பயங்கரவாதிகள் காயமடைந்தனர். தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளின் மறைவிடங்களும் அழிக்கப்பட்டது.