செய்திகள்
ஆப்கானிஸ்தான்

100 தலீபான் கைதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு

Published On 2020-04-04 14:20 GMT   |   Update On 2020-04-04 14:20 GMT
20 ராணுவவீரர்களை விடுவிக்க தலீபான்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், சிறைகளில் உள்ள 100 தலீபான் கைதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
காபூல்:

ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் பிப்ரவரி மாத இறுதியில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் தலீபான்கள் பிடியில் இருக்கும் ராணுவவீரர்கள் மற்றும் அதிகாரிகளை விடுவிக்க அரசு தலீபான் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் அதிபர் அஷ்ரப்கனி அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் இழுபறி நீடித்து வந்தது.

எனவே இது தொடர்பாக தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கும், தலீபான்களுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை அண்மையில் தொடங்கியது.

இதில் முதற்கட்டமாக தங்கள் பிடியில் உள்ள 20 ராணுவவீரர்களை விடுவிக்க தலீபான்கள் சம்மதம் தெரிவித்தனர். அதற்கு பிரதிபலனாக சிறைகளில் உள்ள 100 தலீபான் கைதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை அதிபர் அலுவலகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
Tags:    

Similar News