செய்திகள்
கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் (கோப்பு படம்)

கொரோனா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தர மறுத்த நபருக்கு ஒன்றரை ஆண்டு சிறை

Published On 2020-04-03 22:52 GMT   |   Update On 2020-04-03 22:52 GMT
வெளிநாடு சென்று திரும்பிய தகவலை மறைத்தது மட்டுமல்லாமல் கொரோனா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தர மறுத்த குற்றத்திற்காக சீனாவில் ஒரு நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளனது.
பீஜிங்:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 

உலகம் முழுவதும் 58 ஆயிரத்துக்கு அதிகமானோர் இந்த வைரசால் உயிர்ழந்துள்ளனர். சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவுக்கு அந்நாட்டிலும் 3 ஆயிரத்து 322 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவத்தொடங்கியது முதலே சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக ஹூபேய் மாகாணம் முழுவதும் சீல் வைக்கப்பட்டது. 

ஆனால், தற்போது நிலைமை சீரடைந்து வருவதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அங்கு அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறிய பலருக்கும் சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சீனாவின் ஹேனன் மாகாணம் ஜெங்ஜோ நகரை சேர்ந்த ஜிய் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வெளிநாடு சென்றுள்ளார். 



பின்னர் மார்ச் 7-ம் தேதி ஜிய் தனது சொந்த ஊர் திரும்பியுள்ளார். ஆனால், தான் வெளிநாடு சென்று நாடு திரும்பிய தகவலை அவர் நகர அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். 

மேலும், கொரோனா அச்சுறுத்தலில் இருத்தலில் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்திய சுய தனிமைப்படுத்துதலையும் அவர் கடைபிடிக்கவில்லை. மாறாக வெளிநாட்டில் இருந்து திரும்பிய அடுத்த நாளே (மார்ச் 8) தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அலுவலகத்திற்கு சென்ற அவருக்கு மார்ச் 9-ம் தேதி காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. 

இது குறித்து தகவலறிய அப்பகுதி போலீசார் மார்ச் 10-ம் தேதி ஜிய்யை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். 

ஆனால் அவர் போன் அழைப்பை ஏற்காமல் தனது தாயாரிடம் போனை கொடுத்துள்ளார். ஜிய்யின் தாயார் தனது மகன் வெளிநாடு திரும்பிய தகவல் மட்டுமல்லாமல் மகனுக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறிகள் குறித்த தகவலையும் போலீசிடமிருந்து மறைத்தார்.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் ஜிய்-க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 40 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.



இதையடுத்து, வெளிநாடு சென்று திரும்பிய தகவலை மறைத்தது, சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படாதது, கொரோனா அறிகுறிகள் இருந்த போது தானாக முன்வந்து சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காதது ஆகிய குற்றங்களுக்காக ஜிய் மீது வழக்கு தொடர்ப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது ஜிய் மீதான சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தர மறுத்தல், வெளிநாட்டு பயண விவரத்தை மறைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டது. 

இதையடுத்து அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.   
Tags:    

Similar News