செய்திகள்
ஒரே நாளில் 3000 பேர் பலி... கொரோனா உயிரிழப்பு 27 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 360 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெனிவா:
உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 185 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 27 ஆயிரத்து 359 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் சுமார் 3 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும், 4 லட்சத்து 36 ஆயிரத்து 466 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 23 ஆயிரத்து 523 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 360 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இத்தாலியில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் 9134 பேர் பலியாகி உள்ளனர். அதற்குஅடுத்த இடங்களில் ஸ்பெயின் (5138 பலி), சீனா (3295 பலி) ஆகிய நாடுகள் உள்ளன.