செய்திகள்
கோப்பு படம்

நியூயார்க் நகரில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு - பலி 157

Published On 2020-03-25 02:22 GMT   |   Update On 2020-03-25 02:22 GMT
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் 20,875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 157 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் முகக்கவசங்களை பதுக்குவதற்கு தடை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
நியூயார்க்:

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. அங்குள்ள பிரபல நகரமான நியூயார்க்கில் இந்த வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகும் 2 பேரில் ஒருவர் நியூயார்க்கை சேர்ந்தவராக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மட்டும் அங்கு 5,085 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 20,875 ஆக உயர்ந்தது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு திங்கட்கிழமை பலியான 43 பேருடன் சேர்ந்து இதுவரை அங்கு 157 பேர் பலியாகி உள்ளனர்.

வருகிற நாட்களில் நியூயார்க் நகரில் பலியாவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ கூறும்போது, “கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் நியூயார்க் நகரம் இந்த தொற்றுநோய் தாக்குதலின் மையப்பகுதியாக உள்ளது” என்றார்.

அமெரிக்காவில் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 130 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு, திங்கட்கிழமை முடிவில் 43,700 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 550ஐ தாண்டியது.

இதற்கிடையே அமெரிக்காவில் முக்கிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், தனிநபர் பாதுகாப்பு கருவிகளான முகக்கவசம், கை கழுவும் திரவம் (சானிடைசர்) ஆகியவற்றை பதுக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.

பின்னர் டிரம்ப் கூறும்போது, “முக்கிய மருந்துகள், பாதுகாப்பு கருவிகளை கூடுதல் விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். எளிதில் சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்க குடிமக்களின் துன்பத்தை பயன்படுத்தி யாரும் ஆதாயம் அடைவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” என்றார்.

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா ஆகிய பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், அந்த பகுதிகளுக்கு முக்கிய மருந்துகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி டிரம்ப் நிருபர்களிடம் தெரிவித்தார்.
Tags:    

Similar News