செய்திகள்
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தான்: ராணுவ வீரர் நடத்திய தாக்குதலில் சகவீரர்கள் 24 பேர் பலி

Published On 2020-03-20 11:40 GMT   |   Update On 2020-03-20 11:40 GMT
ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ தளத்தில் வீரர்கள் நடத்திய தாக்குதலில் சக வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர தலிபான்களுக்கும் அமெரிக்க படைகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டாலும் ஆப்கானிஸ்தான் அரசின் படையினர் மீதான தாக்குதல் தொடரும் என தலிபான்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தலிபான் பயங்கரவாதிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சிலர் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளில் ரகசியமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பாதுகாப்பு படையில் உள்ள சக வீரர்கள் மீது அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் சபுல் மாகாணம் குவாட் பகுதியில் உள்ள ராணுவ தலைமை தளத்தில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் உறங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த தலிபான் ஆதரவு கொள்கைகளை கொண்ட 4 பாதுகாப்பு படை வீரர்கள் சிலர் உறங்கிக்கொண்டிருந்த வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் 24 பேர் உயிரிழந்தனர்.
Tags:    

Similar News