செய்திகள்
கொரோனா அச்சுறுத்தல் - இலங்கையில் 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொழும்பு:
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதேபோல், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்காளதேசம், பூடான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இலங்கையில் 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பணிகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வரும் 19-ம் தேதி வரை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளான சுகாதாரம், வங்கி, போக்குவரத்து உள்ளிட்டவை மட்டும் செயல்படும் என அறிவித்துள்ளது. இதனிடையே, கொழும்புவில், அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்கள், முக்கிய அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதால் நகரமே வெறிச்சோடியுள்ளது.