செய்திகள்
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர்

ஆப்கானிஸ்தான்: போலீஸ் நடத்திய தாக்குதலில் 5 தலிபான்கள் பலி

Published On 2020-03-14 19:23 GMT   |   Update On 2020-03-14 19:23 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டில் போலீசாருடன் நடந்த மோதலில் தலிபான் பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. 

இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இதற்கிடையே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. 

அமைதி ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், ஆப்கானிஸ்தான் அரசின் படையினர் மீதான தாக்குதல் தொடரும் எனவும் தலிபான்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஹெல்மண்ட் மாகாணம் மர்ஜா மாவட்டத்தில் உள்ள கேம்ப் பசார் பகுதியில் போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை குறைவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். 

இதனால் போலீசாருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் தலிபான் பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் தரப்பில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News