செய்திகள்
துருக்கி அதிபர் எர்டோகன்

ஒப்பந்ததை மீறுகிறீர்கள்... நாங்களும் தாக்குதல் நடத்துவோம் - சிரியாவுக்கு எச்சரிக்கை விடும் துருக்கி

Published On 2020-03-12 00:22 GMT   |   Update On 2020-03-12 00:22 GMT
இட்லிப்பில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிரியா தாக்குதல் நடத்துவதாகவும், நாங்களும் பதிலடி தாக்குதல்களை நடத்துவோம் என துருக்கி அதிபர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்காரா:

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 

கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்  தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது.
 
சிரியா மற்றும் துருக்கி என இரு நாடுகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 50-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையில், இட்லிப் மாகாணத்தில் நடைபெற்ற சண்டையை நிறுத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் ஒப்பந்தம் செய்துகொண்டனர். இதனால் கடந்த சில நாட்களாக இட்லிப் பகுதியில் எந்தவித தாக்குதல்களும் அரங்கேறவில்லை. 

இதற்கிடையில் இட்லிப் பகுதியில் சண்டை நிறுத்த ஒப்பந்ததை மீறி சிரியா தாக்குதல் நடத்திவருவதாக துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சிரியாவின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி நாங்களும் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 



இது குறித்து துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று எர்டோகன் கூறியதாவது:-

''சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு இட்லிப் மக்கள் முதல் முறையாக தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஆனாலும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்கனவே மீறப்பட்டுவிட்டது. 

ஒப்பந்தத்தை மீறும் சிரிய அரசுப்படைகளை ரஷியா தடுத்து நிறுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் ஒருவேளை சண்டை நிறுத்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை என்றால் சிரியாவுக்கு பதிலடி மட்டுமல்லாமல் நாங்களாகவே தாக்குதல்களையும் நடத்துவோம்’’ என்றார். 
Tags:    

Similar News