செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தாக்குதல் - ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 354 ஆக உயர்வு

Published On 2020-03-11 11:42 GMT   |   Update On 2020-03-11 11:42 GMT
கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளான ஈரானில், இன்று மேலும் 63 பேர் இறந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது.
டெஹ்ரான்:

சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் மற்ற மாகாணங்களுக்கும் வேகமாக பரவியது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதற்கிடையே, ஈரான் நாட்டில் மந்திரிகள் உள்பட சில முக்கிய பிரமுகர்கள் கொரோனா பாதிப்புக்கு பலியான நிலையில் பல அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அங்கு பொது மக்களிடையே கடும் பீதி நிலவி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளான ஈரானில் இன்று மேலும் 63 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் கியானோஷ் ஜஹான்போர் கூறுகையில், ஈரானில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 63 பேர் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News