செய்திகள்
விளாடிமிர் புதின்

ரஷியாவின் நிரந்தர அதிபராகிறாரா விளாடிமிர் புதின்?

Published On 2020-03-11 01:21 GMT   |   Update On 2020-03-11 01:21 GMT
ரஷியாவில் அடுத்து நடைபெற உள்ள 2 அதிபர் தேர்தல்களிலும் தான் போட்டியிட வகை செய்யும் விதமாக சட்டத்திருத்தம் ஒன்றை அதிபர் புதின் அமல்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் 2036-ம் ஆண்டுவரை அதிபராக செயல்பட முடியும்.
மாஸ்கோ:

ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் கேஜிஎப் எனப்படும் உளவு அமைப்பில் தனது வாழ்க்கையை தொடங்கியவர் விளாடிமிர் புதின் (67) . 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி ரஷியா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது அப்போதைய அதிபர் எல்ட்சின் பொறுப்பு பிரதமராக விளாடிமிர் புதினை முதல் முறையாக நியமனம் செய்தார். 

அந்த சமயம் அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக கருதப்பட்ட பகுதிகளில் வான்வெளி மூலம் குண்டுகள் வீசப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கைகளால் புதின் ரஷிய மக்களிடையே புகழ்பெற்றார்.

இதையடுத்து, பல காரணங்களுக்காக அதிபராக இருந்த எல்ட்சின் தனது பொறுப்பை ராஜினாமா செய்து 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி விளாடிமிர் புதினை ரஷியாவின் பொறுப்பு அதிபராக நியமணம் செய்தார். 

அப்போது முதல் ரஷியாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் தன்னை நிலைநிறுத்திவந்த புதின் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றார். 

இதனால் 2024-வரை ரஷியாவில் புதினின் ஆதிக்கம் இருக்கும். இந்த வெற்றியின் மூலம் தொடச்சியாக இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

இதற்கிடையில், ரஷியாவில் உள்ள சட்டத்தின்படி ஒரு நபர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.  இதனால், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் புதின் போட்டியிட முடியாத சூழல் இருந்து வந்தது.

இந்நிலையில், ஆளும் ஐக்கிய ரஷியா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வலண்டினா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்ற மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இந்த மசோதாவின் படி பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அமலுக்குவரும். 



அதாவது, ஏற்கனவெ தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் சட்டம் புதிக்கப்பட்டதால் மீண்டும் முதலில் இருந்தே அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்.

சுருக்கமாக கூற வேண்டுமானால் தற்போது அதிபராக உள்ள புதின் அடுத்துவரும் 2024-ம் ஆண்டு மற்றும் 2030-ம் ஆண்டு ஆகிய இரண்டு தேர்தல்களிலும் எந்தவித தடையும் இன்றி போட்டியிடலாம்.

பாராளுமன்ற உறுப்பினர் வலண்டினா தாக்கல் செய்த இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதா அதிபர் புதினின் ஒப்புதலுடன் சட்டமாக இயற்றப்பட்டது. 

இந்த சட்டம்  ஏற்கனவே பின்பற்றப்பட்டுவந்த விதிமுறைகளை மீறினால் மட்டுமே நீதிமன்றத்தால் ரத்துசெய்யமுடியும்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை பூஜியத்தில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளதால் 2024 மற்றும் 2030 ஆகிய இரண்டு தேர்தல்களில் விளாடிமிர் போட்டியிட எந்தவித சட்டசிக்கலும் இல்லை. 

ஒரு வேளை இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றால் 2036-ம் ஆண்டுவரை அதாவது தனது 83 வயது வரை ரஷியாவின் அதிபராக விளாடிமிர் புதின் செயல்படலாம் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டத்தின் மூலம் ரஷியாவின் புதின் என்ற நிலையில் இருந்து புதினின் ரஷியா என்ற நிலைக்கு அந்நாடு சென்றுள்ளதாக கருத்துகள் எழுந்தவண்ணம் உள்ளது.

இதற்கிடையில் விளாடிமிர் புதின் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்க எல்லா வேலைகளையும் செய்துவருவதாக ரஷிய எதிர்க்கட்சி தலைவரான அலெஸ்சி நவல்னி குற்றச்சாட்டியுள்ளார்.
Tags:    

Similar News