செய்திகள்
ரஷிய ராணுவ வாகனம் மற்றும் போரில் உயிரிழந்த துருக்கி வீரர் (கோப்பு படங்கள்)

துருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின் இட்லிப்பில் தாக்குதல் சம்பவங்கள் குறைவு - ரஷியா

Published On 2020-03-10 01:03 GMT   |   Update On 2020-03-10 01:03 GMT
துருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் தாக்குதல் சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோ:

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 

கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்  தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது.
 
கடந்த சில வாரங்களாக நடைபெற்ற சண்டையில் சிரியா மற்றும் துருக்கி என இரு தரப்பிலும் 50-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சண்டையில் சிரிய படைகளுக்கு ஆதரவு அளிக்கும் ரஷியா, கிளர்ச்சியாளர்களையும் துருக்கி படைகளையும் குறிவைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தியது.   

இதற்கிடையில், இட்லிப் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் மாஸ்கோவில் கடந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இட்லிப் மாகாணத்தில் நடைபெற்றுவரும் சண்டையை நிறுத்த இரு நாடுகளுக்கும் இடையேயும் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி கடந்த 6-ம் தேதி முதல் இட்லிப் மாகாணத்தில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், புதின் - எர்டோகன் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு பின்னர் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் துருக்கி படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் பெரும் அளவு குறைந்துள்ளதாக ரஷிய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இட்லிப் விவகாரத்தில் தங்களுக்கு உதவும் படி துருக்கி அதிபர் தயூப் எர்டோகன் நேட்டோ அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Tags:    

Similar News