செய்திகள்
விபத்துக்குள்ளான பஸ்

பாகிஸ்தான்: தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரெயில் - 30 பேர் பலி

Published On 2020-02-28 23:02 GMT   |   Update On 2020-02-29 02:56 GMT
பாகிஸ்தான் நாட்டில் ஆளில்லா ரெயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.
காபுல்: 

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருந்து சர்கோதா நகரம் நோக்கி 50-க்கும் அதிகமான பயணிகளுடன் நேற்று இரவு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. சிந்து மாகாணம் சுக்குர் மாவட்டம் ரோரி பகுதியில் உள்ள ஆளில்லா ரெயில்வே கேட் பகுதியை பஸ் கடக்க முற்பட்டது.

அப்போது அந்த தண்டவாளத்தில் கராச்சி நோக்கி சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருந்த 'பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ்’ ரெயில் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பஸ் மீது மின்னல் வேகத்தில் மோதியது.

மோதிய வேகத்தில் ரெயிலின் முன்புறம் சிக்கிக்கொண்ட பஸ் தண்டவாளத்தில் 200 மீட்டர்கள் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு பின்னர் தூக்கி வீசப்பட்டது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 30 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சுக்குர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இந்த விபத்தின் போது பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News