செய்திகள்
ஹூண்டாய் தொழிற்சாலை

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி - தென்கொரியாவில் ஹூண்டாய் தொழிற்சாலை மூடல்

Published On 2020-02-28 12:31 GMT   |   Update On 2020-02-28 12:31 GMT
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
சியோல்:

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் நேற்று மேலும் 44 பேர் கொரோனா வைரசுக்கு பலியானதையடுத்து அங்கு உயிரிழப்பு 2788 ஆக உயர்ந்துள்ளது. 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர்.

தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் இறப்பு விகிதம் கணிசமாக குறையத் தொடங்கி உள்ளது.

ஆனால், சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இதற்கிடையே, தென் கொரியாவில் இந்த வைரசுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 256 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 2022 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவன தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News