செய்திகள்
கொரோனா: சவுதி அரேபியாவுக்கு ஆன்மீக பயணிகள் நுழைய தடை
கொரோனா பீதி காரணமாக புனிதப்பயணிகள் சவுதி அரேபியாவிற்குள் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது.
ரியாத்:
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரசுக்கு அந்நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 807 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தற்போது உலகின் 30-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.
இதற்கிடையில் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வருகிறது. இதன் கோர தாக்குதலுக்கு ஈரானில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரேன், ஓமன் உள்ளிட்ட நாடுகளிலும் வைரஸ் பரவியுள்ளது.
ஆனால், இஸ்லாமிய புனிதத்தளங்கள் அதிகம் உள்ள சவுதி அரேபியாவில் தற்போதுவரை கொரோனா வைரஸ் யாருக்கும் பரவில்லை.
இந்நிலையில், அண்டை நாடுகளில் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில் அதை தடுக்கும் விதமாக பிற நாடுகளில் இருந்து புனிதப்பயணம் மேற்கொள்ளோர் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெக்கா, மெதினா உள்ளிட்ட இஸ்லாமிய புனிதத்தளங்கள் நிறைந்துள்ள சவுதி அரேபியாவுக்கு ஹச் புனித பயணிகள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.