செய்திகள்
சுற்றுலா பயணிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஓட்டல்

ஐரோப்பிய நாடுகளில் பரவும் கொரோனா - ஸ்பெயின் ஓட்டலில் 1,000 பேர் அடைத்து வைப்பு

Published On 2020-02-26 19:08 GMT   |   Update On 2020-02-26 19:08 GMT
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1,000 பேர் ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
மாட்ரிட்:

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உருவான கொரோனா வைரசுக்கு அங்கு தினந்தோறும் மக்கள் கொத்துகொத்தாக செத்து மடிகின்றனர். அங்கு இந்த கொடிய வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,700 ஐ தாண்டி உள்ளது.

அதே சமயம் சீனாவில் இந்த கொடிய நோயின் வீரியம் சற்று குறைய தொடங்கி இருக்கிறது. வைரஸ் பரவலின் வேகம் முன்பை விட குறைந்து வரும் நிலையில், கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

ஆனால் கொரோனா வைரஸ் தற்போது, சீனாவுக்கு வெளியே கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவை தவிர்த்து சுமார் 30 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய 3 நாடுகளும் கொரோனாவால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில்தான் அதிக மக்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

அங்கு இந்த கொடிய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 115 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,300 ஐ நெருங்கி உள்ளது. இவர்களில் அமெரிக்க ராணுவவீரர் ஒருவரும் அடங்குவார். தேகு நகர் அருகே உள்ள ராணுவதளத்தில் இருக்கும் 23 வயதான அமெரிக்க வீரருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

தென்கொரியாவை தொடர்ந்து, ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் கொரோனா வைரஸ் தனது கைவரிசையை காட்டி வருகிறது. அங்கு கொரோனாவுக்கு 11 பேர் பலியான நிலையில், 300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இத்தாலியில் இருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கி இருக்கிறது.

சிசிலி தீவில் ஒரு பெண், குரோஷியாவில் ஒரு ஆண், ஆஸ்திரியாவில் தம்பதியர் இருவர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுவிட்சர்லாந்திலும் ஒருவரை கொரோனா தாக்கி உள்ளது. இதையடுத்து, வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. அதே சமயம் இத்தாலியுடனான எல்லைகளை மூடப்போவதில்லை என மற்ற ஐரோப்பிய நாடுகள் உறுதி அளித்துள்ளன.

இதற்கிடையில், ஸ்பெயின் நாட்டின் டெனரீப் மாகாணம் கேனேரி தீவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் இத்தாலியை சேர்ந்த டாக்டர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இந்த ஓட்டலில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 1,000-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் ஓட்டலை விட்டு வெளியேற விடாமல் ஓட்டலுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர்.

இதையடுத்து, அந்த ஓட்டல் தனிமைப்படுத்தப்பட்டு ஓட்டலை சுற்றிளும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டலில் இருக்கும் விருந்தினர்களுக்கு தொடர்ந்து மருத்துவபரிசோதனை நடந்து வருகிறது.

இதில் ஓட்டலில் இருக்கும் மேலும் 2 இத்தாலி சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓட்டல் விருந்தினர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

ஓட்டல் விருந்தினர்கள் அனைவரும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள் என ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News