செய்திகள்
சீனாவில் தொடரும் சோகம் - கொரோனாவுக்கு மேலும் 71 பேர் பலி
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று மேலும் 71 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்துள்ளது.
பீஜிங்:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா, ஈரான், இத்தாலி, மலேசியா போன்ற 25 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவது தற்போது குறைய தொடங்கியுள்ளது. எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், சீனாவில் நேற்று மேலும் 71 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக நேற்று 508 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சீனாவில் மொத்தம் 77 ஆயிரத்து 658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.