செய்திகள்
சாரணர் இயக்க மாணவர்கள்

இந்தோனேசியாவில் வெள்ளம் - மலையேற்றம் சென்ற 8 மாணவர்கள் பலி

Published On 2020-02-22 18:32 GMT   |   Update On 2020-02-22 18:32 GMT
இந்தோனேசியாவில் சாரணர் இயக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 8 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜகார்த்தா:

இந்தோனேசியா நாட்டின் யோக்யகர்தா மாகாணத்தில் ஆற்றின் அருகே உள்ள மலையில், சாரணர் இயக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் 249 பேர் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது பெய்த திடீர் கனமழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மலையேற்றம் சென்றவர்கள் பலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலானவர்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளத்தில் சிக்கி 8 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 23 மாணவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், வெள்ளத்தில் சிக்கி மாயமான 2 மாணவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கடந்த (ஜனவரி) மாதம் நாட்டின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி சுமார் 70 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News