செய்திகள்
ஆப்கானிஸ்தான் : தலிபான் - பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலில் 13 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வருகிறது.
மேலும், பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ஆப்கானிஸ்தான் அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
இதற்கு தலிபான் பயங்கரவாதிகள் நடத்திவரும் தாக்குதல்களில் அமெரிக்க படை வீரர்களும் உயிரிழந்துவருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் சர்-இ-போல் மாகாணத்தில் கொரக் அரபியா கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடியை குறிவைத்து நேற்று நள்ளிரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் தலிபான்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நடத்த இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 9 பேர் பாதுகாப்பு படையினர் 4 பேர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 10 பேர், தலிபான் பயங்கரவாதிகள் 13 பேர் என மொத்தம் 23 பேர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையில், தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதி உடன்படிக்கை வரும் 29-ம் தேதி கையெழுத்து ஆகலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைப் பாம்பியோ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.