செய்திகள்
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் தலிபான்களின் முக்கிய தளபதி உள்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வருகிறது.
மேலும், பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ஆப்கானிஸ்தான் அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
இதனால் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் ஹெல்மெண்ட், ஹஸ்னி உள்பட மூன்று மாகாணங்களில் உள்ள தலிபான் பதுங்கு இடங்களை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரும், நேட்டோ படையினரும் நேற்று தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் தலிபான் தளபதி உள்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.