செய்திகள்
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில் தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல கிராமங்களை மீட்டுவருகின்றனர்.
இதனால் ராணுவத்திற்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது பயங்கர மோதல்கள் நடைபெற்றுவருகிறது. இந்த மோதல்களின் போது சில சமயங்களில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் நங்கர்ஹார் மாகாணம் ஷுரெஹ் ரொட் மாவட்டம் கரக் கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் இரண்டு வாகனங்களில் அருகில் உள்ள சந்தைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேட்டோ படையினர் தலிபான் பயங்கரவாதிகள் தான் செல்வதாக தவறாக எண்ணிய பொதுமக்கள் சென்ற இரண்டு வாகனங்களை குறிவைத்து போர் விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் குழந்தை, பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபகாக உயிரிழந்தனர்.