செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் கோர்ட்டில் ஊழல் வழக்கு விசாரணை - நவாஸ் ஷெரீப் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

Published On 2020-02-15 20:00 GMT   |   Update On 2020-02-15 20:00 GMT
சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கு விசாரணை தொடர்பாக நவாஸ் ஷெரீப் இந்த மாதம் 28-ந்தேதி வரை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 69), சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகிறார். இது தொடர்பான வழக்கு விசாரணை லாகூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் கைதாகி நவாஸ் ஷெரீப் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதயத்தில் கோளாறு ஏற்பட்டது. அவருக்கு உடல்நல காரணங்களையொட்டி, லாகூர் ஐகோர்ட்டு கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி ஜாமீன் வழங்கியது. அதைத் தொடர்ந்து அவர் லண்டன் சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து ஆஜராவதற்கு தனக்கு விலக்கு வழங்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் தரப்பில் லாகூர் ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, நவாஸ் ஷெரீப் இந்த மாதம் 28-ந்தேதி வரை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. இந்த சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் ஷெரீப் மற்றும் நெருங்கிய உறவினர் யூசுப் அப்பாசும் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News