செய்திகள்
வர்த்தகப் போர் (கோப்புப் படம்)

அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதம் குறைப்பு - சீனா

Published On 2020-02-06 08:48 GMT   |   Update On 2020-02-06 08:48 GMT
கூடுதல் வரி விதிக்கப்பட்ட ஒரு சில அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி பாதியாக குறைக்கப்படும் என சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பீஜிங்:

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போர், உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணமாகவும் கூறப்பட்டது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இதையடுத்து அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம்  கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி கையெழுத்தானது. சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் - சீன துணை பிரதமர் லீயு ஹி ஆகியோர் கையெழுத்திட்டனர். அதன்படி ஒரு சில இறக்குமதி பொருட்களுக்கான கூடுதல் வரிவிதிப்பை இருநாடுகளும் தளர்த்தும் முயற்சியில் ஈடுபட்டன. 

‘அடுத்த கட்ட வர்த்தக ஒப்பந்தம் விரைவில் தொடங்கப்படும். நான் சீனா செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என அமெரிக்க அதிபர் டிரம்பும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கூடுதல் வரி விதிக்கப்பட்ட  ஒரு சில அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி பாதியாக குறைக்கப்படும் என சீன நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

‘கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்ட அமெரிக்க பொருட்களின் வரி 5 சதவீதமாகவும், 5 சதவீதம் வரி விதிக்கப்பட்ட பொருட்களின் வரி 2.5 சதவீதமாகவும் குறைக்கப்படும். இது வரும் 14 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்’ என சீன நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் 500க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீனாவுடன் அமெரிக்கா ஒருங்கிணைந்து செயல்படும் என சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News