செய்திகள்
செக் குடியரசில் பரவும் மர்மக் காய்ச்சல் - 12 பேர் பலி
ஐரோப்பிய நாடான செக் குடியரசு நாட்டில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு 12 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிராக்:
ஐரோப்பிய நாடான செக் குடியரசு நாடு ஜெர்மனி அருகே அமைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக மர்மக்காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை 22 பேர் இந்த மர்மகாய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை இன்ஃப்ளூயென்சா வைரஸ்கள் மூலம் பரவுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இந்த மர்ம காய்ச்சலுக்கு செக் குடியரசு நாட்டில் 12 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
‘நாடு முழுவதும் இந்த இன்ஃப்ளூயென்சா தொற்றுநோய் பரவியுள்ளது. ஒவ்வொரு ஒரு லட்சம் குடிமக்களிலும் 1,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்ம காய்ச்சல் தொடர்பான நோய்களில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். பொதுவாக குழந்தைகளையும், இளம் வயதினரையும் இந்த நோய் தாக்குகிறது. இந்த மர்ம காய்ச்சலுக்கு ‘இன்ஃப்ளூயென்சா ஏ வைரஸ்’ முக்கிய காரணமாக இருக்கலாம்.
கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த தொற்றுநோயின் தாக்கம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என செக் குடியரசு சுகாதாரத் துறை அதிகாரி இவா கோட்வால்டோவா தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் சமயத்தில், இன்ஃப்ளூயென்சா தொற்றுநோய் ஐரோப்பாவில் பரவி வருவது சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.