செய்திகள்
கொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு நாளை அவசர ஆலோசனை
கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக வல்லுனர்களுடன் உலக சுகாதார அமைப்பு நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளது.
ஜெனிவா:
சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியது.
கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்தும், உணவாகவும் சீன மக்கள் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது.
மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவும் இந்த வைரசுக்கு சீனாவில் இதுவரை 132 பேர் உயிழந்துள்ளனர். மேலும், 6061 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உலகின் 17 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில் சீனாவுக்கு விமான போக்குவரத்தை பல்வேறு விமான நிறுவனங்கள் தடை செய்துள்ளன.
அதேபோல் வுகான் நகரில் தங்கியிருந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த 206 பேரை அந்நாடு விமானம் மூலம் டோக்கியோ நகருக்கு இன்று அழைத்து சென்றுள்ளது. மேலும், டோக்கியோ வந்த பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து விவாதிக்க சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் அவசர குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதாக சர்வதேச சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அடனாம் ஹிபர்யசூஸ் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுனர்களுடன் முக்கிய ஆலோசனை நடைபெறலாம் என கருதப்படுகிறது.