செய்திகள்
பிரேசிலில் கனமழை - வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி
பிரேசிலில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர்.
ரியோ டி ஜெனிரோ:
பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக ஸ்டேட் ஆப் மினஸ் ஹிராய் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்சாரம், சாலை போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. 3600-க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், பிரேசிலில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25 பேரை காணவில்லை எனவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணமல்போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.