செய்திகள்
வைரஸ் சோதனை மற்றும் சீனாவில் உள்ள இந்திய தூதரகம்

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி - சீனாவில் இந்திய குடியரசுதின நிகழ்ச்சிகள் ரத்து

Published On 2020-01-24 11:39 GMT   |   Update On 2020-01-24 11:39 GMT
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி காரணமாக நாளை மறுநாள் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கொண்டாடவிருந்த குடியரசுதின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பீஜிங்:

சீனாவை மட்டுமல்லாமல் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வவ்வால் மூலம் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வவ்வாலுக்கும் நேரடி தொடர்ப்பு இல்லை என்றாலும் அவற்றை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இந்த கட்டுவிரியன் பாம்புககளில் விஷத்தன்மை குறைவாக உள்ளதால் அவற்றை சீனர்கள் உணவாக சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

குறிப்பாக சூப் வைத்து சாப்பிடுவதற்கு இந்த வகை பாம்புகளை சீனர்கள் அதிகம் விரும்பி வாங்குவது உண்டு. அதிலும் உயிருடன் உள்ள பாம்புகளை வாங்கி சென்று சமைத்து சாப்பிடுகின்றனர். ஆகையால், வவ்வாலில் இருந்து கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக  சீனா மக்களிடம் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுவாசக்கோளாறை ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் இந்த வைரசால் சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை சீனாவில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 830 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 



இந்த வைரஸ் மக்களிடம் பரவுவதை தடுக்க அந்நாட்டில் உள்ள ஐந்து நகரங்களில் சாலை, ரெயில், விமானம் என அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளையும் சீன அரசு தடைசெய்துள்ளது.

இதற்கிடையில், இந்திய குடியரசு தினம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.  

இந்நிலையில்,  கொரோனா வைரசின் தாக்குதல் சீனா முழுவதும் வேகமாக பரவிவருவதால் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருந்த இந்திய குடியரசு தின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News