செய்திகள்
கட்டிடத்தின் சுவர்களில் கடல் நுரை ஒட்டியுள்ளதை படத்தில் காணலாம்.

கடல் நுரையில் மூழ்கிய ஸ்பெயின் நகரம்- வீடியோ

Published On 2020-01-23 10:51 GMT   |   Update On 2020-01-23 10:51 GMT
ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா கடற்கரை பகுதியில் உள்ள நகரம் இடுப்பளவிற்கு கடல் நுரையால் சூழப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மாட்ரிட்:

ஸ்பெயின் நாட்டில் குளோரியா புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களாக அங்கு மழை, பனி, ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் உள்ள நகரங்களில் சூறைக்காற்று சுழன்றடித்தது வருகிறது.

இந்த புயல் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போய் உள்ளனர். வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. 30 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேட்டலோனியா பிராந்தியத்தில், கடற்கரையை ஒட்டியுள்ள டாசா டெல் மார் நகரில் சூறைக்காற்று காரணமாக வீதிகள் முழுவதும் கடல்நுரையால் சூழப்பட்டுள்ளது. மழை வெள்ளம் போன்று கடல் நுரை சூழ்ந்ததால், பொதுமக்கள் தெருவில் இறங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கட்டிடத்தின் சுவர்களில் பல மீட்டர் உயரத்திற்கு, சிமெண்டு பூச்சுபோன்று கடல் நுரை ஒட்டியுள்ளது. 

கடல் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றத்தினால் உருவாகும் இந்த நுரை, பொதுவாக பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், தற்போதுள்ள நுரையில் உள்ள பாசியின் அளவைப் பொருத்து, அவை காற்றில் பரவும் நச்சுகளை வெளியிடலாம் என்பதால், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படும் என அமெரிக்க தேசிய பெருங்கடல் சேவை நிறுவனம் கூறி உள்ளது.
Tags:    

Similar News