செய்திகள்
துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடம்

மெக்சிகோ பள்ளியில் ஆசிரியையை சுட்டு கொன்றுவிட்டு மாணவன் தற்கொலை

Published On 2020-01-11 19:52 GMT   |   Update On 2020-01-11 19:52 GMT
மெக்சிகோவில் தனியார் பள்ளியில் ஆசிரியையை சுட்டு கொன்ற மாணவன், பின்பு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவின் கோவ்ஹூய்லா மாகாணத்தில் உள்ள டோரியான் நகரில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வகுப்புகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தன.

அப்போது, 11 வயதான மாணவன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் தனது வகுப்பறைக்குள் நுழைந்தான். அங்கு பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியையை அவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

இதில் ஆசிரியை ரத்த வெள்ளத்தில் சரிந்து, துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து, வகுப்பறையில் இருந்த சக மாணவ, மாணவிகள் அனைவரும் பயத்தில் அலறினர். பின்னர் அந்த மாணவன் அவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

இதற்கிடையில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்கு ஓடி வந்தார். அவரையும் சுட்ட அந்த மாணவன், பின்னர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.

மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 5 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
Tags:    

Similar News