செய்திகள்
விமான விபத்தில் உயிரிழந்த உக்ரைன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்.

176 பேரை பலி கொண்ட விமான விபத்து - விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்காவிடம் வழங்க ஈரான் மறுப்பு

Published On 2020-01-09 19:23 GMT   |   Update On 2020-01-09 19:23 GMT
176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை அமெரிக்காவிடம் வழங்க ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
டெஹ்ரான்:

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் இருந்த 176 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விபத்து நடந்துள்ளது. எனவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.



உலகளாவிய விமான போக்குவரத்துத்துறை விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை வழிநடத்த ஈரானுக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில் தனி விசாரணை குழுவை அமைத்து ஈரான் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகிறது.பொதுவாக இதுபோன்ற விசாரணைகளில் அந்த விமானத்தை தயாரித்த நிறுவனமும், விமானத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்யும் திறன் பெற்ற சில நாடுகளும் ஈடுபடுவது வழக்கமானது.

ஆனால், விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்க அரசிடமோ ஒப்படைக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே, உக்ரைன் விமானம் நடுவானில் பறந்தபோதுதிடீரென தீப்பிடித்ததும், அதனால் மீண்டும் விமான நிலையத்துக்கு திருப்ப முயற்சித்தபோது விமானம் விபத்துக்குள்ளானதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News