செய்திகள்
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் உருக்குலைந்து கிடக்கும் காட்சி

சோமாலியா பாராளுமன்றம் அருகே குண்டுவெடிப்பு- 4 பேர் பலி

Published On 2020-01-08 09:53 GMT   |   Update On 2020-01-08 09:53 GMT
சோமாலியாவில் பாராளுமன்றம் அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
மொகடிஷூ:

சோமாலியாவில் அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம், அரசை கவிழ்க்கும் முயற்சியாக,  தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி மக்கள் பலியாகின்றனர். 

அவ்வகையில், தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாராளுமன்றம் அருகே அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம் இன்று தற்கொலைத் தாக்குதலை நடத்தி உள்ளது. 

பாராளுமன்றம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன. அப்போது, காரில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்திருந்த, பயங்கரவாதி ஒருவன் திடீரென வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.

இதனால் அந்த கார் வெடித்துச் சிதறியது. அருகில் இருந்த வாகனங்களும் தூக்கி வீசப்பட்டு தீப்பிடித்தன. இந்த தாக்குதலில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இதேபோல் கடந்த மாதம் 28-ம் தேதி மொகடிஷூவில் அல் ஷபாப் நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில் 81 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News