செய்திகள்
10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு- காரணம் இதுதான்
வறட்சி காலங்களில் அதிக அளவு தண்ணீரை குடிப்பதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
கான்பெரா:
உலகின் 7 கண்டங்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் 18 சதவீதம் பாலைவனங்கள் உள்ளன. அதேபோல் அந்நாட்டின் 35 சதவீத பகுதிகள் குறைந்த அளவிலேயே மழை பெறுகின்றன. உலக வெப்பமயமாதலாலும், அதிகப்படியான வறட்சி காரணமாகவும் அந்நாட்டில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்புவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை கோடிக்கணக்கான வனவிலங்குகள், பறவைகள் தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கங்காருகளும், கோலா கரடிகளும் பாதுகாப்புக்காக மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை கட்டித்தழுவிய புகைப்படங்கள் மனதை உலுக்கின.
இந்நிலையில், வறட்சி காலங்களில் அதிக அளவு தண்ணீரை குடிப்பதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
‘தெற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஃபெரல் வகை ஒட்டகங்கள் கடுமையான வறட்சி காலங்களில் மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அதிக அளவிலான நீரை குடித்து விடுகின்றன. இதனால் மனிதர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒட்டகங்களின் கழிவுகளில் இருந்து ஒரு டன் கார்பன்-டை- ஆக்சைடுக்கு நிகரான மீத்தேன் வாயு உருவாவதாகவும், இது உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆகையால் 5,000 முதல் 10,000 ஒட்டகங்களை ஹெலிகாப்டரில் பறந்தபடி சுட்டுக்கொல்ல அரசு முடிவெடுத்துள்ளது’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.