செய்திகள்
பட்டாசு வெடிக்க தடை

புத்தாண்டையொட்டி பட்டாசு வெடிக்க தடை - காட்டுத்தீ பரவுவதை தடுக்க நடவடிக்கை

Published On 2019-12-31 04:36 GMT   |   Update On 2019-12-31 04:36 GMT
காட்டுத்தீ பரவுவதை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ரா மற்றும் சில முக்கிய பிராந்தியங்களில் புத்தாண்டையொட்டி வாணவேடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
சிட்னி:

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணங்களான விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தாஸ்மானியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. ஏற்கனவே இந்த காட்டுத்தீயில் பல லட்சம் ஹெக்டேர் அளவிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகி விட்டது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 9 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் அனைத்து மாகாணங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. இதன்காரணமாக மேற்கூறிய 3 மாகாணங்களிலும் காட்டுத்தீ மிகவும் மோசமடைந்து வருகிறது. குறிப்பாக விக்டோரியா மாகாணத்தில் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் காட்டுத்தீ மளமளவென பரவி வருகிறது.

அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலா பிராந்தியமான கிழக்கு கிப்ஸ்லேண்டில் இருந்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் பிராந்தியத்தின் முக்கிய சாலைகளையொட்டி காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

இதற்கிடையே காட்டுத்தீ பரவுவதை தடுக்கும் வகையில் தலைநகர் கான்பெர்ரா மற்றும் சில முக்கிய பிராந்தியங்களில் புத்தாண்டையொட்டி வாணவேடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் காட்டுத்தீயால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் வாணவேடிக்கைகளுக்கு தடையில்லை என அந்த மாகாண அரசு அறிவித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News