செய்திகள்
கிறிஸ்டினா கோச்

விண்வெளியில் 288 நாட்கள் தங்கி இருந்து சாதனை படைத்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை

Published On 2019-12-28 13:07 GMT   |   Update On 2019-12-28 13:07 GMT
அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் ஒற்றை விண்வெளிப் பயணத்தில் 288 நாட்கள் தங்கி இருந்து சாதனை படைத்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்கா, ரஷியா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த  ஜூலை மாதம் 20-ந்தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். இன்றுடன் (சனிக்கிழமை) அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 288 நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார்.

பிப்ரவரி 6, 2020 இல் கிறிஸ்டீனா கோச் பூமிக்குத் திரும்புகிறார், அப்போது அவர் 300 நாட்களுக்கு மேல் கழித்திருப்பார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) கிறிஸ்டீனா கோச் தங்கியிருந்தபோது, 4 முறை விண்வெளியில் நடந்து உள்ளார்.  அக்டோபர் 12 ஆம் தேதி முதல்  தனது சக ஊழியரும் சிறந்த நண்பருமான ஜெசிகா மீருடன்  விண் வெளியில் நடந்து இருவரும் உலகின் தலைப்பு செய்தியானார்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே ஏழு மணி நேரத்திற்கும் மேலான பயணத்தில், பெண்கள் இருவரும் வெண்வெளி நிலையத்தின்  சூரிய வலையமைப்பிற்கு கூடுதலாக உடைந்த மின் கட்டுப்படுத்தியை சரிசெய்யும் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.

நிலையத்தின் சூரியசக்தி அமைப்பிற்கான புதிய சூரிய  பேட்டரிகளை நிறுவ ஜனவரி மாதத்தில் மீண்டும் இரண்டு முறை வெளியே செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

15 பெண்கள் ஒரு விண்வெளிப் பயணத்தை இதற்கு முன் நடத்தியிருந்தாலும், ஒவ்வொரு முறையும் அவர்கள் ஆண் சகாக்களுடன் சென்று  வந்திருந்தனர்.

36 நாடுகளைச் சேர்ந்த சுமார் 550-க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் இன்றுவரை விண்வெளியில் வலம் வந்திருக்கிறார்கள். 18 விண்வெளி வீரர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். 
Tags:    

Similar News