செய்திகள்
டிரம்ப்

டிரம்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது

Published On 2019-12-19 01:59 GMT   |   Update On 2019-12-19 02:58 GMT
அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக அந்நாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தன் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டுவதாகவும், உக்ரைன் அதிபரிடம் பிடனுக்கு எதிராக சதி செய்ய பேரம் பேசியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து டிரம்ப் மீதான புகாரை விசாரிக்க கடந்த சில நாட்களுக்கு முன் பிரதிநிதிகள் சபை அனுமதி அளித்தது. அதன்படி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்துள்ள நிலையில், டிரம்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக இன்று அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்த இந்த தீர்மானத்தின் மீது சுமார் 14 மணி நேரம் விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், தீர்மானத்திற்கு ஆதரவாக 230 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 197 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்தனர். எனவே, பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கக் கோரும் முதல் தீர்மானம் நிறைவேறியது. இதேபோல் பாராளுமன்ற நடவடிக்கைகளை தடுத்தார் என்ற என்ற டிரம்புக்கு எதிரான 2வது தீர்மானமும் நிறைவேறியது.

பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இனி செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும். அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு செனட் அவையில் 53 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். எனவே, அங்கு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் 66 செனட் உறுப்பினர்களின் பலம் தேவை. இதனால் அங்கு டிரம்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேறுவது சந்தேகம்தான். டிரம்ப் பதவிக்கு உடனடியாக சிக்கல் இல்லை.
Tags:    

Similar News