செய்திகள்
சாம்சங்

தொழிற்சங்க நடவடிக்கைகளை நசுக்கிய வழக்கு - ‘சாம்சங்’ நிறுவன தலைவருக்கு 18 மாதம் சிறை

Published On 2019-12-18 22:26 GMT   |   Update On 2019-12-18 22:26 GMT
தொழிற்சங்க நடவடிக்கைகளை நசுக்கிய வழக்கு தொடர்பாக ‘சாம்சங்’ நிறுவன தலைவர் மற்றும் துணை தலைவருக்கு தலா 18 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
சியோல்:

தென்கொரியாவை சேர்ந்த ‘சாம்சங்’ நிறுவனம் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக லீ சாங் ஹோன் இருந்து வருகிறார். துணை தலைவராக காங் குயாங் ஹூன் இருக்கிறார்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் தொழிற் சங்க நடவடிக்கைகளை நசுக்குவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. எனினும் இந்த வழக்கில் அவர்கள் உடனடியாக முன்ஜாமீன் பெற்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை சியோல் மத்திய மாவட்ட கோர்ட்டில் நேற்று நடந்தது. அப்போது லீ சாங் ஹோன் மற்றும் காங் குயாங் ஹூன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் அவர்கள் இருவருக்கும் தலா 18 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து உடனடியாக அவர்களது முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 
Tags:    

Similar News