செய்திகள்
நேபாளத்தில் சோகம் - பஸ் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி
நேபாளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 14 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காத்மண்டு:
நேபாளத்தின் காலின்சவுக் பகுதியில் உள்ள புனித தலத்தில் இருந்து பக்தாபூர் நகருக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை 8.30 மணியளவில் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் உள்ள சுன்கோஷி பகுதியில் இருக்கும் ஆபத்தான வளைவு ஒன்றில் பஸ் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.