செய்திகள்
சீனா - நிலக்கரி சுரங்க வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பரிதாப பலி
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை வெள்ளம் சூழ்ந்ததில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
பெய்ஜிங்:
சீனாவின் தென்மேற்கே உள்ள காங்சியான் கவுன்டி பகுதியில் சிச்சுவான் மாகாணம் அமைந்துள்ளது.
இங்குள்ள நிலக்கரி தொழிற்சாலை குழுமத்தின் பராங் நிறுவனம் சார்பில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுரங்க தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், அந்த சுரங்கத்தில் திடீரென நீர் புகுந்து பெருக்கெடுத்து ஓடியது. சுரங்கத்திற்குள் வெள்ளம் முழுவதும் சூழ்ந்தது.
சுரங்க தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். அவர்களில் 4 பேர் பலியாகினர். மேலும், 14 பேர் இன்னும் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்களுடன் 200 ஊழியர்களும் மீட்பு பணியில் இணைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு மற்றும் தேடுதல் பணி நடந்துவருகிறது.