செய்திகள்
ஓமர் அல் பஷீர்

சூடான் முன்னாள் அதிபருக்கு ஊழல் வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை

Published On 2019-12-14 11:57 GMT   |   Update On 2019-12-14 11:57 GMT
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சூடான் முன்னாள் அதிபர் முஹம்மது பஷீருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கர்ட்டோம்:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி முதல் அதிபராக பதவி வகித்தவர், ஓமர் அல் பஷீர்(75).   

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். ஓமர் அல் பஷீர் பதவி விலக வலியுறுத்தி அங்கு போராட்டங்கள் நடந்தன.

பின்னர் உள்நாட்டுப் போராக வெடித்த இந்த போராட்டங்களின்போது ஓமர் அல் பஷீர் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.



இதற்கிடையில், சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்நாட்டின் ராணுவ மந்திரி அவாத் இப்ன் அவுப், கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி ராணுவத்தின் உதவியுடன் ஓமர் அல் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார்.

ஆட்சியை விட்டு நீக்கப்பட்ட ஓமர் அல் பஷீர் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக சூடான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுருந்தன.

ஓமர் அல் பஷீர் தனது வீட்டில் இருந்து 69 லட்சம் யூரோக்கள், 3 லட்சத்து 51 ஆயிரத்து 770 அமெரிக்க டாலர்கள் மற்றும் 57 லட்சம் சூடான் பவுண்டுகளை முறைகேடாக பதுக்கி வைத்திருந்தது விசாரணையின்போது தெரியவந்தது.

சுமார் ஒருமாத கால விசாரணைக்கு பின்னர் அவர் கர்ட்டோம் நகரில் உள்ள கோபெர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓமர் அல் பஷீர் தனது அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தி ஏராளமான வெளிநாட்டு பணத்தை முறைகேடான வகையில் பதுக்கி வைத்திருந்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் 31-8-2019 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை ஜாமீனில் விடுவிக்க கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஓமர் அல் பஷீருக்கு இரண்டாண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சூடான் நாட்டு சட்டங்களின்படி, 70 வயதை கடந்த குற்றவாளிகளை சிறைகளில் அடைப்பதில்லை என்பதால் தற்போது 72 வயதாகும் ஓமர் அல் பஷீர், தண்டனைக்காலம் முடியும்வரை சீர்திருத்த மையத்தில் அடைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News