செய்திகள்
ஈபிள் டவர்

பண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ் ரெயில்வே

Published On 2019-12-14 07:16 GMT   |   Update On 2019-12-14 07:16 GMT
பிரான்சில் நடைபெற்று வரும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நிறுத்தி வைக்குமாறு அந்நாட்டு ரெயில்வே நிர்வாகம் ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பாரிஸ்: 

பிரான்சில் அரசின் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த 5-ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் போராட்டங்கள்  நடைபெற்று வருகின்றன. ஓய்வூதிய வயது வரம்பு 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டது, சேவைக்காலத்தை பொறுத்து  ஓய்வூதியத்தின் தொகை மாறுபடுதல், ஓய்வூதியத்தை 64 வயதுக்கு முன்னதாக கோரினால் ஓய்வூதிய தொகை வேறுபடுதல் என  பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதால் அரசு ஊழியர்களிடையே பெரும் நம்பிக்கையின்மை எழுந்தது. 

இதை எதிர்த்து முதலில் சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள்,  வழக்கறிஞர்கள், போலீசார், விமானநிலைய ஊழியர்கள் என அனைவரும் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர். 9 நாட்களாக நடந்து  வரும் தொடர் போராட்டத்தினால் பிரான்ஸ் நாடு ஸ்தம்பித்துள்ளது. 

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு போராட்டத்தை இடைநிறுத்தம் செய்யுங்கள் என பிரான்ஸ்  தேசிய ரெயில்வே நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

‘விடுமுறை தினங்கள் குடும்பத்தாரை சந்திப்பதற்கு முக்கியமான தருணமாகும். கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி உலகம்  முழுவதும் கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாடவும் தங்களது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருக்கவும் பொதுமக்கள்  விரும்புவர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் ரெயிலில் பயணம் செய்வார்கள். அதனால் தான் கிறிஸ்துமஸ் பண்டிகை  விடுமுறை காலங்களில் போராட்டத்தை இடைநிறுத்தி வைக்குமாறு ரெயில்வே ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்’, என பிரான்ஸ்  தேசிய ரெயில்வே நிறுவன தலைவர் ஜீன் பியரே ஃபரண்டாவ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News