செய்திகள்
கோப்பு படம்

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நிகழ்த்திய சாலையோர குண்டுவெடிப்பில் 10 பேர் பலி

Published On 2019-12-13 11:22 GMT   |   Update On 2019-12-13 11:22 GMT
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய சாலையோர குண்டுவெடிப்பு தாக்குதலில் பெண்கள் உள்பட பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு அரசுப்படை மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி, தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.

இதற்கிடையில், அந்நாட்டின் காஷ்னி மாகாணத்தின் ஜக்ஹடோ மாவட்டத்தில் உள்ள சாலையில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை பதுக்கிவைத்துள்ளனர். 

இந்நிலையில் அந்த சாலையில் இன்று ஒரு வேனில் 16 பயணிகள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் சாலையில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டுகள் திடீரென வெடித்து சிதறியது. 

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் வேனில் பயணம் செய்த ஒரு குழந்தை, 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Tags:    

Similar News