செய்திகள்
சிறுபான்மையினரின் உரிமையை இந்தியா பாதுகாக்க வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்
இந்தியா தனது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப தனது நாட்டில் உள்ள மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வாஷிங்டன்:
பாகிஸ்தான் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியான வேறுபாடுகளினால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துவருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அரசு தனது நாட்டில் உள்ள மத சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவகாரங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் சட்டத்தின் கீழ் அனைவரையும் சமமாக பாவித்தல் ஆகியவை எங்கள் இரு ஜனநாயக நாடுகளின் அடிப்படைக் கொள்கைகளாகும்.
இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப தனது நாட்டின் மத சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்துகிறது’ என அவர் தெரிவித்தார்.