செய்திகள்
அமெரிக்க செனட்டர் லின்சே கிரகாம்

பாகிஸ்தான் நினைத்தால் ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வரலாம்- அமெரிக்கா

Published On 2019-12-10 07:43 GMT   |   Update On 2019-12-10 07:43 GMT
தலிபான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்திவிட்டால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என அமெரிக்க செனட்டர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. பொதுமக்களையும் ராணுவத்தினரையும் குறிவைத்து அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். ராணுவமும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் தலைவர்களுக்கிடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அமெரிக்க அரசும் ஒருபுறம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கடந்த மாதம் திடீர் பயணமாக ஆப்கானிஸ்தான் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் தலிபான் அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளனர் என தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை கத்தாரில் அமெரிக்க அரசு தலிபான் அமைப்பினருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், தலிபான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்திவிட்டால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என அமெரிக்க செனட்டர் லின்சே கிரகாம் தெரிவித்துள்ளார்.

‘ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்றால் தலிபான் அமைப்பினருக்கு பதிலாக பாகிஸ்தானிடம் தான் பேச வேண்டும். தலிபான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்திவிட்டால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வரலாம்’ என கிரகாம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
Tags:    

Similar News